பஸ் ஸ்டாண்டில் பிரசவ வலி சென்னை பெண்ணுக்கு ஆட்டோவில் குவா குவா

திருச்சி : சென்னை நெற்குன்றம் மேட்டுகுப்பத்தை சேர்ந்தவர் விமல்ஆனந்த்(35). இவரது மனைவி மங்கையர்க்கரசி(32). இவரின் சொந்த ஊர் புதுகை மாவட்டம் விராலிமலை வைரம்பட்டி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மங்கையர்க்கரசி சில நாட்களுக்கு முன் தாய் வீட்டுக்கு வந்தார். அவரை, சென்னைக்கு அழைத்து செல்வதற்காக கணவர் விமல்ஆனந்த் வைரம்பட்டி வந்தார். நேற்று சென்னை செல்வதற்காக வைரம்பட்டியில் இருந்து விமல்ஆனந்த், மங்கையர்க்கரசி, இவரது தந்தை மாணிக்கம் ஆகியோர் பஸ்சில் திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்தனர். அப்போது திடீரென மங்கையர்க்கரசிக்கு பிரசவ வலி ஏற்பட்டு வலியால் துடித்தார்.

விமல்ஆனந்த் செய்வதறியாது திகைத்து நின்ற போது அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். ஆனால் வலி அதிகமாகவே, விமல்ஆனந்த் அருகில் இருந்த ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அரசு மருத்துவமனையில் சிசு மற்றும் மகப்பேறு மருத்துவமனை நுழைவு வாயில் அருகே சென்றபோது மங்கையர்கரசி ஆட்டோவில் பிரசவித்தார். அவருக்கு அழகான ஆண் குழந்ைத பிறந்தது.

Comments